தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோயில்களில் விநாயருக்கு தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. 18 படி பச்சரிசியால் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டையை மூங்கில் கூடையில் வைத்து சிவாச்சாரியார்கள், மேள தாளத்துடன் எடுத்து வந்து விநாயகருக்கு படைத்தனர். இந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர். இதேபோல், மதுரை நகரில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர், ஸ்ரீ செல்வ விநாயகர், சித்தி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் இருந்து விநாயகரின் அங்குசத்தேவரும், மருந்தீஸ்வரரும் பல்லக்கில், குளத்திற்கு மேலதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து, கற்பக விநாயகரை வணங்கினர்.
கடலூரில் இனிப்பு கடை நடத்தி வரும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரம்மாண்டமான லட்டு பிள்ளையார் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். 72 கிலோ எடை கொண்ட லட்டு பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள அருள்மிகு அறுபடை நவக்கிரக ரத்தின விநாயகர் கோவிலில், விநாயகருக்கு புஷ்ப அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அறுபடை நவக்கிரக ரத்தின விநாயகரை தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, சுமார் 10 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை, பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.