பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிடுகிடுவென உயரும் பூக்கள் விலை : மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.3,000-க்கு விற்பனை
Jan 14 2024 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான தை திருநாள் நாளை உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ, முல்லைப்பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையை பொருட்படுத்தாமல் ஏராளமான வியாபாரிகள் பூக்களை போட்டிப் போட்டு வாங்கி சென்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் மலர் சந்தைகளில் மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஜாதிமல்லி ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் பூக்களை வாங்குவதில் சந்தைகளில் குவிந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மலர் சந்தையில் நேற்று 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ இன்று கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கும், ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பூக்களின் விற்பனை களைகட்டியுள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.