தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் : சிறுவர்கள் மேளம் அடித்தும், பழைய பொருட்களை எரித்தும் உற்சாகம்
Jan 14 2024 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் போகி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை தமிழக மக்களால் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி போகி பண்டிகையான இன்று, சென்னையில் அதிகாலை வீட்டில் உள்ள பழைய பொருட்கள், ஆடைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர். வயது முதிர்ந்த முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பட்ட மக்களும் உற்சாகமாக மேளம் அடித்து போகி பண்டிகையை கொண்டாடினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே வீட்டில் உள்ள பழைய பொருட்கள், ஆடைகள், பாய்கள் போன்றவற்றை பொதுமக்கள் வீதியில் போட்டு எரித்து தைப்பொங்கலை உற்சாகமாக வரவேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, காணை, திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனியையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போகிப் பண்டிகையை கொண்டாடினர். அதிகாலையிலேயே கிழிந்த பாய் உள்ளிட்ட பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மட்டும் தீயிட்டு கொளுத்தி பொதுமக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர்.
திருச்சி மாவட்டத்தில் உறையூர், பாலக்கரை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போகி பண்டிகை வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. உறையூர் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அதிகாலையில் எழுந்து பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து வீட்டிலுள்ள பழைய பொருட்களை தீயிட்டு எரித்து கொண்டாடினர்.
புதுச்சேரி காரைக்காலில் போகிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. போகி பண்டிகையையொட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்து பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும், சிறுவர்கள் அனைவரும் கொளுந்துவிட்டு எரியும் தீயை சுற்றி நின்று மேளங்கள் அடித்து உற்சாகமாக கொண்டாடினர்.