நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆஞ்சநேயர் ஆலங்களில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்து 8 வடை மாலையுடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மார்கழி மாதம் அமாவாசை திதி மூல நட்சத்திரம் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை நங்கநல்லூில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேரை வழிபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக ஆயிரம் லிட்டரில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 108 இளநீர் அபிஷேகங்களுடன் மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலை 4 மணி முதல் சிறப்பு வழிபாடு தொடங்கியது. ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் மூலவருக்கு அதிகாலையில் ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் மற்றும் மூலிகை திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் அமைந்துள்ள அனுமன் சன்னதியில் அனுமன் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நடை திறக்கப்பட்டு அனுமனுக்கு வடை மற்றும் வெற்றிலை மாலை சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலையை வழங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்கள் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பால ஆஞ்சநேயர் கோவிலில் 108 குடங்களில் பாலபிஷேகம் செய்யப்பட்டது. ஹனுமன் ஜெயந்தியையொட்டி பால ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு 108 குடங்களில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஞ்சள் உள்ளிட்ட 21 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
திருச்சி மாநகரில் தபால் நிலையம் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆதிசேடன் மீது அனுமன் சங்கு, சக்கரம் கொண்டு அமர்ந்தபடி தங்ககவசம் சாற்றப்பட்டு விஸ்வரூப அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்றபடி ஆஞ்சநேயப் பெருமாளை தரிசித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பூமலை சஞ்சீவிராய பெருமாள் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடியில் உள்ள 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டரில் விசேஷ பாலபிஷேகம் நடைபெற்றது. காலை 8.30 மணி முதல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் மூலவருக்கு 2 ஆயிரம் லிட்டரில் பால் மற்றும் பன்னீர் திரவியங்களுடன் கூடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மகா யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யபட்டு 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலையை ஆஞ்சநேயர் சிலைக்கு சாற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் அமைந்துள்ள ஆபத்துதாரண ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயிலில் அதிகாலை சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு அயோத்தி சரயு நதிக்கரை புனித நீரைக் கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவருக்கு முத்தங்கி அலங்காரமும் உற்சவருக்கு தங்க கவச அலங்காரமும் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை முதல் பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.