தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்கள் : பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்
Jan 11 2024 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி நீராட்ட விழாவில் எண்ணெய் காப்பு உற்சவத்தில் ஆண்டாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரிய பெருமாள் சந்நிதியில் ஆண்டாளுக்கு ஏகாந்த திருமஞ்சனமும், பெரியாழ்வார் மங்களாசாசனமும் நடைபெற்றது. ஆண்டாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி மாடவீதி வழியாக வீதி உலா வந்தார். இதை ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப்பொங்கல் தேரோட்ட திருவிழாவில் உற்சவர் சாரங்கபாணி பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பொங்கல் தினமான 15ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள் உற்சவத்தில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சின்ன நாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.
கிருஷ்ணகிரி பாப்பாரட்டி ஸ்ரீ வேணுகோபால் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திருமண விழாவில் ஸ்ரீவேணுகோபால் பட்டு வேட்டியுடன் அமர்ந்த நிலையில் தனது இருபுறத்திலும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி பட்டு புடவையில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தனர். பின்னர் மங்கள வாத்தியம் முழங்க ஸ்ரீ வேணுகோபால், ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருக்கல்யாணம் நடைபெற்றது.