கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது
Aug 31 2019 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் எட்டாம் நாளில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாலையில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருக்க கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலிவேட்டை நிகழ்ச்சியில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ விழா நடைப்பெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்ட பின்னர் பட்டு சேலை உடுத்தி, நகைகளால் அலங்கரீக்கப்பட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர வைக்கப்பட்டு தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.