மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாயொட்டி மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
Apr 17 2019 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீனாட்சி அம்மனுக்கு நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். இன்று காலை நடைபெற்றது. சுந்தரேசுவரர் சுவாமி சார்பிலும் மீனாட்சியம்மன் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமங்கலநாண் அணிவிக்கப்பட்டு, மேளதாளத்துடன் பக்தி கோசம் முழங்க மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தேறியது.
திருக்கல்யாண வைபத்தை காண்பதற்காக, பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மீனாட்சிசுந்தரேசுவரர் தேரோட்டமும், நாளைமறுநாள் புகழ்பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.