சபரிமலை வழிபாடு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 6-ஆம் தேதி விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு
Jan 31 2019 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலையில் பெண்கள் வழிபாடு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 6ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம், கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரியும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாது என தெரிவித்த உச்சநீதிமன்றம், சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளும், ஜனவரி 22ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்தது. ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சபரிமலை விசாரணை அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஒருவர், 22ம் தேதி விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, அன்றைய தினம் நடைபெறவிருந்த விசாரணை, தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் வழிபடுவது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 6ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.