சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 பெண் பக்தர்கள் வழிபாடு - உடனடியாக நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைக்கு ஏற்பாடு
Jan 2 2019 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட கடும் எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், இன்று அதிகாலை நடுத்தரவயது பெண்கள் இருவர் தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.எனினும் அங்கு கோயிலின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் எனக் கூறி, அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், ஏற்கெனவே அங்கு தரிசனத்திற்கு முயன்ற பெண்கள் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன்காரணமாக சபரிமலை சன்னிதானம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்று நள்ளிரவு பம்பையை வந்தடைந்த 40 வயதான கனகதுர்கா, பிந்து ஆகிய இருபெண்களும் இன்று அதிகாலை 3.45 மணிக்கு சபரிமலை ஐயப்பன் சந்நிதானம் சென்றனர். அங்கு போராட்டக்காரர்களுக்கு அஞ்சி, 18ம் படியில் ஏறாமல் வேறு வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் சிலர் சீருடையிலும், சாதாரண உடையிலும் சென்றுள்ளனர். அப்பெண்கள் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.