நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வீடுகளில் கொலு கண்காட்சி பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைக்கப் பட்டு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், தில்லை நகர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளிலும், பல்வேறு முக்கிய ஆலயங்களில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவில், பல்வேறு வகையான பொம்மைகள், பல்வேறு மத கடவுள்கள், அஷ்டலட்சுமிகள் என பல்வேறு வகையான பொருட்கள் நவராத்திரி கொலுவில் இடம்பெற்றிருந்தது.
நவராத்திரி விழாவையொட்டி, நெல்லை டவுணை சேர்ந்த துரைராஜ் என்பவரது இல்லத்தில், 4வது ஆண்டாக கொலு வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் சீனிவாச கல்யாணம், மீனாட்சி கல்யாணம், அம்மன், கிருஷ்ணர், மற்றும், 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் புஷ்கரம் விழா பற்றிய கொலு இடம்பெற்றுள்ளது. தாமிரபரணி நதியுடன் தொடர்புடைய அகத்தியரை நினைவுக்கூறும் வகையில் வீட்டில் அவரது உருவ பொம்மை உட்பட 18 சித்தர்களின் உருவ பொம்மைகளும் இந்த கொலுவில் இடம்பெற்றுள்ளன.
தூத்துக்குடியில் பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், பி அன்ட் டி காலனியில் கொலு வைத்து வழிபாடு நடைபெற்று வருகின்றது. இதில் சக்தி, வெள்ளி, துவாரக, கலி, சஞ்சை என ஐந்து யுகங்களை விளக்கும் தத்ரூப கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், விஷ்ணு துர்க்கைக்கு மஹாலெட்சுமி அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நவராத்திரி பெருவிழா புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தாண்டியா ஆட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தாண்டியா நடனம் ஆடி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தாண்டியா நடனம் ஆடியது காண்பவர்களையும் வெகுவாக கவர்ந்தது.