நவராத்திரி விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தாயார் சன்னதியில் கோயில் யானை ஆண்டாள், தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத்ஆர்கன் வாசித்தும், நடந்து சென்று வணங்கியது. யானையின் இத்தகைய வியத்தகு செயலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டு ரசித்தனர்.
நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரத்தில் அன்னை ஸ்ரீசியாமளா அம்பாள் திருக்கோயிலில் தசரா விழாவையொட்டி நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நேற்று 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் ஒரு பகுதியாக வாய்ப்பாட்டு குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஈரோடு அருகே வெட்டுக்காட்டு வலசில் அமைந்துள்ள சைவ மாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கடவுள் பொம்மைகள், கல்யாண செட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. உற்சவர் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொலு அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையை அடுத்த அருள்மிகு தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடை அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி மூன்றாம் நாள் விழாவில், அம்மன் நந்தினி அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். கைலாய வாத்தியங்கள் ஒலிக்க, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை படைவெட்டி மாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. பழனி மலையில் முருகன் வீற்றிருப்பது, கண்ணப்ப நாயனார் சரித்திரம், குடைபிடித்த வினாயகர், சரஸ்வதி, லெட்சுமி, கிருஷ்ணன், தசாவதாரம், கார்த்திகை பெண்கள் உள்ளிட்ட பல விதமான நூற்றுக்கணக்கான பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
தூத்துக்குடியில் வீடுகளில் பெண்கள் கொலு பொம்மை கண்காட்சி வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தேசிய தலைவர்கள், திருக்கல்யாண செட், தசாவதார பொம்மைகள், இயற்கை விழிப்புணர்வு பொம்மைகள் மற்றும் பல்வேறு சுவாமி பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் கொலு பொம்மைக் கண்காட்சி நடைபெற்றது. 16வது ஆண்டாக நடைபெறும் கொலு பொம்மைக் கண்காட்சியில் விநாயகர், முருகர், கிருஷ்ணர், சிவன், பார்வதி, ஆஞ்சநேயர், ராமர், லட்சுமணர், சீதா, ஆஞ்சநேயர், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட கலைநயமிக்க சுவாமி சிலைகள் மற்றும் தமிழகத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி மல்லி, செம்பருத்தி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு அம்பாளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கண்ணைக் கவரும் கொலு கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
திருப்பதியில் ஸ்ரீமன் நாராயணனுக்கு நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் கருட சேவை வரும் 14-ம் தேதி முதல் நடைபெறுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் திரளான பெண்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் ஒன்று திரண்டு மலர்கள் தொடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். 4 டன் எடையில் ரோஜா, சாமந்தி, துளசி, தாமரை, தாழம்பு போன்ற மணமுள்ள மலர்களும், தென்பாளை, தென்னங்குருத்து, இளநீர் குலை உள்ளிட்டவையும் தொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் லாரி மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் முத்துப்பந்தல் வாகன சேவை கோவில் மாடவீதிகளில் நடைபெற்றது. சகஸ்ர தீப அலங்கார சேவை முடிந்த பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் மலையப்பசாமி சகஸ்ரதீப அலங்கார சேவை மண்டபத்திலிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். வாகன மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு திருவாபரண அலங்காரம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தங்கத்தால் தயார் செய்யப்பட்டு முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளினர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.