நாடு முழுவதிலும் ஆடி அமாவாசையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள புண்ணிய தலங்களில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நள்ளிரவு முதலே ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அதிகாலையில் அக்னி தீர்த்தகரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து பொதுமக்கள், பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள 22 புனிததீர்த்தங்களில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.
திருவையாறு புஷ்ப மண்டபத்துறையில், ஆடி அமாவாசையை ஒட்டி, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் புரோகிதர்களுக்கு அரிசி, காய்கறிகள் கொடுத்து தானங்கள் செய்தனர்.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும், திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் கமலாலய தீர்த்த குளத்தில் அதிகாலை முதலே, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்கள் நினைவாக திதி கொடுத்து கடலில் நீராடினர். பின்னர் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மணி கர்ணிகை தீர்த்தத்தில் நீராடி, திருமணக்கோலத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரரையும், துர்க்கை அம்மனையும் வழிப்பட்டனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கடற்கரையில், ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்து கடலில் புனித நீராடினர். இதேபோல் தூத்துக்குடி துறைமுகக் கடற்கரையிலும், அதிகாலையிலிருந்து, திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
முக்கடலும் சங்கமிக்கும், கன்னியாகுமரியில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். பின்னர், எள், பச்சரிசி, தர்பை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு முன்னோர்களுக்கு பூஜை செய்து கடலில் நீராடினர். பின்னர் இங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று சென்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் மற்றும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள குறுக்குத்துறை மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில், ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
முக்கிய வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவிலிலும் ஆடி அமாவாசையை ஒட்டி நேற்று இரவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் மற்றும் குளக்கரையில் குவிந்தனர். இன்று அதிகாலை கோவில்குளக்கரையில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் வீரராகவப் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் உப்பு, மிளகு, பால், வெல்லம் போன்றவற்றை தீர்த்தக் குளத்தில் கரைத்து வழிபாடு செய்தனர்.
கோவில் நகரமான கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளம் மற்றும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள பகவத் படித்துறை, டபீர் படித்துறை ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் புரோகிதர்களைக் கொண்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் ஈரோடு, நாமக்கல் திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து அருகில் உள்ள சங்கமேஸ்வரர் ஆலயத்திலும் வழிபாடு செய்தனர்.