திருத்தணி முருகன் கோவில் சரவணப்பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பதிருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Aug 7 2018 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கையில் மின்னொளியில் 2-ஆம் நாள் தெப்பதிருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிகள் திருக்கோவிலில், ஆடிக் கிருத்திகையையொட்டி, கோயில் அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கையில் மூன்று நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவத்தின் 2-ஆம் நாள் வெகு விமரிசையாக நடைபெற்றது. வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான், மின்னொளியில் அலங்கரிப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம், பனங்குழ கிராமத்தில் ஆலம், அரசு, வேம்பு ஆகிய மூன்றும் ஒன்றாக காட்சி தரும் சுயம்பு வேம்படி அம்மன் ஆலயத்தில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-வது வெள்ளிகிர்மைகளில் பால் குட பெருவிழா நடைபெறும். அந்த வகையில், மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் சுமந்து சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்தும் வழிபட்டனர். மகா தீபாரதணையும் காட்டப்பட்டது.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புனித சலேத் மாதா கோயிலின் 153-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்புத் திருப்பலிக்கு பின் ஜெபவழிபாடு நடத்தி கொடியேற்றப்பட்டது. முன்னதாக, மாதாவின் கொடியானது அலங்கரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மாதா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மற்றும் தோப்புத்துறை ஆகிய இடங்களில் உள்ள திரவுபதி அம்மன் கோவில்களில் ஆண்டு விழாவையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த பத்து நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரு கோவில்களிலும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.