விருதுநகர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா : மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Jun 26 2018 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி நடைபெற்ற மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோவில், பாண்டிய மன்னர்களில் ஒருவரான மாறவர்ம சுந்தரபாண்டியதேவரால் கி.பி 1216-ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, அருள்மிகு சொக்கநாத பெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாணம் மேள வாத்தியங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சொக்கநாத பெருமானும், மீனாட்சி அம்மனும் மணக்கோலத்துடன் புஷ்ப பல்லாக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமரசவல்லி அம்பாள் உடனுறை ஆதி தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. யாக சாலையிலிருந்து வேத மந்திரங்கள் முழங்க, கடங்கள் கோபுர விமான கலசத்திற்கு வந்தடைந்தது. மேலும், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கோபுர விமான கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான நாகநாதர் ஆலயத்தின் 25-ம் ஆண்டு பிரம்மோத்சவ பெருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில், திருநாகவள்ளி அம்பாள் சமேத நாகநாதசுவாமிகள் எழுந்தருளியதும், மேளதாளங்கள் முழங்க, திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனிடையே, வேலூர் கோட்டையில் மிகப் பழமையான ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவையொட்டி, அதிகார நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குள தென்கரையில் அமைந்துள்ள மண்டபத்தில், வெள்ளை யானை வாகனத்தில் ஸ்ரீராஜகோபால சுவாமி, ராஜ அலங்காரத்தில் ஸ்ரீவித்யா தாயாருடன் அமர்ந்து திருக்கோலத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.