ஊதிய உயா்வு உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் : தமிழ்நாடு திருக்கோயில் பணியாளா்கள் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
Jun 26 2018 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊதிய உயா்வு உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு திருக்கோயில் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம், நீதிமன்ற உத்தரவின்படி பணிக்கொடை, ஓய்வூதியம், தினக்கூலி பணியாளா்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 25 அம்சம் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஏற்கெனவே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்டப் போராட்டம் கடந்த 6 ஆம் தேதி கோவையிலும், 21 ஆம் தேதி சென்னை ஆணையா் அலுவலகம் எதிரிலும் நடைபெற்றது. இருப்பினும் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் ஏற்கெனவே முடிவு செய்தபடி நாளை முதல் திருக்கோயில் பணியாளா்கள் காலவரையற்ற உள்ளிருப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம் பழனியில், திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் நிர்வாகிகள், தமிழக இந்து சமய அறநிலையத்துறை தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்திற்கு தள்ளியுள்ளதாகவும், நாளை முதல் தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.