கும்பகோணத்தில் மாசிமகப் பெருவிழா : ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்
Feb 27 2018 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில் மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.
கும்பகோணத்தில் உள்ள திருக்கோயில்களில் மாசிமகப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 8ம் நாளான இன்று, ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தின் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். இதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் ஒன்றன்பின் ஒன்றாக திருத்தேர்களை வடம்பிடித்து இழுத்து நான்குமாட வீதிகள் வழியாக ஆலயத்தை வலம் வந்தனர்.
ஐந்து தேர்களும் இன்று பிற்பகல் நிலைக்கு வந்தடையும். முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நாளை மறுநாள் மகாமகக் குளத்தில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, நாகை மாவட்டம் திரு மருகளை அடுத்த திருக் கண்ணபுரம் பழமை வாய்ந்த சௌரி ராஜ பெருமாள் ஆலயத்தில், மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பெருமாள், ஆண்டாள், பத்மினி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர், நான்கு ரத வீதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.