சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு தரிசனம் அறிமுகம் : ரூ.1000 செலுத்தினால் சிறப்பு வழியில் தரிசனம் செய்யலாம்
Nov 19 2017 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில், பக்தர்கள் ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் நிதி அளித்து சிறப்பு தரிசனம் செய்யலாம் என்றும், அன்னதானத்துக்கான நிதி ஆதாரத்தை அதிகரிக்க, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பேசிய தேவஸ்தானம் போர்டு உறுப்பினர்கள், சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அன்னதான திட்டம் நடைபெறுவதால், அதற்கான நிதி ஆதாரத்தை அதிகரிக்க சிறப்பு தரிசனம் செய்வதற்கான புதிய திட்டத்தை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது என கூறினர். மேலும் அன்னதான திட்டத்துக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் நிதி அளிப்பவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும், மற்ற பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த தரிசன திட்டமானது காவல்துறை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு சீசனையொட்டி, கடந்த 15-ந்தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை சபரிமலையில் காணிக்கை, அப்பம், அரவணை மற்றும் பூஜைகள் மூலமாக 4 கோடியே 34 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தரிசன நேரத்தை அதிகரித்து இருப்பதன் மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது எனவும் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர்.