மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பரிபூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு திருக்கோவில்களில் அ.இ.அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள ஸ்ரீ் சக்தி மாரியம்மன் கோயிலில், கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில், அ.இ.அ.தி.மு.க.வினர் தங்கத் தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர். சோழிங்கநல்லூர் ப்ருத்தியங்கரா தேவி கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. தாம்பரம் நாகேஸ்வரி கோயிலில் உள்ள கால பைரவருக்கு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க மாணவர் அணி சார்பில், பாப்பாரப்பட்டி அருள்மிகு பெரியமாரியம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆயுள் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.
நாகை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் சிவலோகநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். சீர்காழி சாய்பாபா கோயில், சோழன்பேட்டை பெருமாள் கோயில், கேது ஆலயம், மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டக் கழக மகளிர் அணி சார்பில், முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. கைகளில் விளக்குகளை ஏந்தி ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆஞ்சநேயர் கோயிலில் அ.இ.அ.தி,மு.க. சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட அ.இ.தி.மு.க. சார்பில் செங்கோட்டை ஸ்ரீ் குலசேகரநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருமலை குமாரநாத சுவாமி கோயிலில் கழகத்தினர் பலர் தங்கத் தேர் இழுத்து சுவாமியை வழிபட்டனர்.
நீலகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், உதகை மாரியம்மன் கோயில், குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், களிவயலில் உள்ள கத்தோலிக்க பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.