திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழாவின் 2ம் நாளன்று, மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஜீலி ஸ்ரீநீலிவனேஸ்வரர் திருக்கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி, ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி சிவன் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. இதில் ஏராளமான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
புதுக்கோட்டையில் உள்ள சிங்கமுத்து அய்யனார் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 501 பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. மங்களாம்பிகை அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அபிஷேகம் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் தனிக்கோயில் கொண்டுள்ள கமலாம்பிகை அம்மனுக்கு ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கரூர் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து நடைபெற்ற தங்கத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
நாகை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த கீழையூர் மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 508 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜையும் - நாமக்கல் அருகே பொன்விழா நகர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் சீதா திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதேபோல், ராமநாதபுரத்தை அடுத்த, சேதுபதி மன்னர் சமஸ்தானத்துக்கு சொந்தமான நயினார்கோவிலில் உள்ள நாகநாதர் சன்னதியில், ஆடிப்பூர விழா தொடங்கியது. நாகநாதசுவாமிக்கும், செளந்தரநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.