மகாமகப் பெருவிழாவை யொட்டி, கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது
Feb 14 2016 9:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாமகப் பெருவிழாவை யொட்டி, கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புகழ்பெற்ற மகாமகப் பெருவிழா, கும்பகோணத்தில் நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடி வருகின்றனர். இவ்விழாவை யொட்டி, ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீஅபிமுகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. சூரிய பிரபையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதனிடையே, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரம்மோற்சவ விழாவின் போது, தினமும் தியாகராஜசுவாமி, வடிவுடையம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். வரும் 21-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறவுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில், மாசிமாத திருவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்றிரவு நடைபெற்ற தெப்பத்திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.