களைக்கட்ட தொடங்கிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க பஞ்ச மூர்த்திகளின் திருக்குடை மாடவீதியுலா
Nov 26 2022 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க திருக்குடை மாடவீதியுலா நடைபெற்றது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் சிறப்பு கொண்டதுமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6ம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.
10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் போது காலை மற்றும் இரவு பஞ்சமூர்த்திகள் மாடவீதியுலா நடைபெறும். இதில் சுவாமிகளுக்கு மேல் கட்டப்படும் திருக்குடைகளை ஒவ்வொரு ஆண்டும் புதியதாக சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஸ்ரீ அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தின் சார்பில் அண்ணாமலையார் கோயிலுக்கு காணிக்கையாக அளிப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் 18ம் வருடமாக சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 திருக்குடைகளை ஸ்ரீ அருணாசலா ஆன்மிக சேவா சங்கத்தின் சார்பில் வழங்கினர். அண்ணாமலையார் கோயிலில் இந்த திருக்குடைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்த திருக்குடைகள் செண்டை மேளம், நாதஸ்வரம், ஆடல் பாடலுடன் ராஜகோபுரம் முன்பாக மாட வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்தது. பின்னர் இவை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டன.