வீடுகளிலேயே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள் - கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வீடுகளிலேயே தொழுகை
May 14 2021 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாததால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் நாகூர் தர்கா உட்பட அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளதால், இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். தோப்புத்துறை, கோடியக்கரை, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், துளசியாப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
தூத்துக்குடியில், ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், கொரோனா பாதிப்பிலிருந்து உலக மக்கள் மீண்டுவர வேண்டுமென பிரார்த்தனை செய்தனர்.
திருச்சி மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். ஏழை ஏளியோருக்கு உதவிகளையும் செய்தனர்.
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மண்ணடியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 50 பேர், தங்கள் வீட்டின் மாடியிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தொழுகையில் ஈடுபட்ட அவர்கள், கொரோனா பாதிப்பிலிருந்து உலக மக்கள் மீண்டுவர வேண்டுமென பிரார்த்தனை செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள், ஏழை எளியோருக்கு உதவிகளை வழங்கிய பின்னர், புத்தாடைகளை அணிந்து அவரவர் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தொழுகை நடத்தினர். கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வர வேண்டுமென இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.