மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
Feb 28 2020 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாசி பெருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களில் இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் பின் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 8-ம் தேதி நடைபெறுகிறது.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து கொடி மரத்திற்கு மா, மஞ்சள், திரவியம், இளநீர், பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிமரத்தில் விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.
கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் மாசித்திருவிழா இன்று தொடங்கியது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கொடி கம்பத்திற்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நந்தி உருவம் பொரித்த திருக்கொடியினை ஏற்றி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, மாசித் திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். முக்கிய திருவிழாவான வெள்ளித் தேர் உற்சவம் மார்ச் 7-ம் தேதி நடைபெறுகிறது.