ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
Jul 22 2014 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. இதனையொட்டி, ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்ற பின்னர் மேளதாளம் முழங்க பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்வாய்ந்த ராமநாத சுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வரும் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.