மறைந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபடும் மஹாளய அமாவாசை - நீர் நிலைகளில் ஏராளமானேர் தர்பணம்
Sep 23 2014 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாளய அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், திருவள்ளூர் உள்ளிட்ட புனித தலங்களில் ஏராளமான மக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாதந்தோறும் அமாவாசை திதி வரும்போதிலும், தை, ஆடி மற்றும் புராட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்து முக்தி அடைவார்கள் என்பது பரவலான நம்பிக்கையாக உள்ளது. அதன்படி, மஹாளய அமாவாசையான இன்று தமிழகம் முழுவதிலும் நதிக்கரைகள், குளக்கரைகள் மற்றும் கடற்கரைகளில் ஏராளமான மக்கள் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
மஹாளய அமாவாசைக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் திருவள்ளூர் வீரராகவ சுவாமிஆலய திருக்குளத்தில் அதிகாலையிலிருந்தே மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். முன்னோர்களின் நினைவாக திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதேபோன்று, திருவொற்றியூர் கடற்கரையிலும் மறைந்த முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள புனித அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில், காவிரி ஆற்றில் மஹாளய அமாவாசை வழிபாடு நடைபெற்றது. ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செலுத்தினர்.
கும்பகோணம் மகாமக குளத்தில் ஏராளமானோர் நீராடி வழிபட்டதுடன், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்று வடகரையில் அமைந்துள்ள புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நன்றிக்கடன் செலுத்தினர்.
இதேபோல், நாகை மாவட்டம் துலா கட்டம் மற்றும் காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் சங்குமுக தீர்த்தம் மற்றும் வேதாரண்யம் சன்னதி கடல், கோடியக்கரை, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் குளம் உள்ளிட்ட இடங்களிலும் மஹாளய அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே அமைந்துள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் கச்சபேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள குளத்திலும் ஏராளமானோர் தங்கள் மூதாதையர்களுக்க தர்ப்பணம் அளித்து வழிப்பட்டனர்.