வடக்கு சிரியா எல்லைப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய துருக்கி: இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
Oct 11 2019 6:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடக்கு சிரியாவின் மீது துருக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
சிரியாவில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க படைகளுடன் குர்தீஷ் சிரிய ஜனநாயகப் படையும் ஈடுபட்டு வந்தது. எனினும் குர்தீஷ் படைகளை தங்களது எதிரியாகவே அண்டை நாடான துருக்கி எண்ணி வருகிறது. தற்போது, சிரிய எல்லைப்பகுதியில் இருந்து தங்கள் படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், வடக்கு சிரியாவின் மீது துருக்கி அதிரடி தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. குர்தீஷ் படைகள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அங்கு சிரிய அகதிகளை மறுகுடியேற்றம் செய்ய உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள 30 மைல்களுக்கு மேல் தாக்குதல் நடத்தப்படாது என துருக்கி உறுதியளித்துள்ளது. இரண்டு நாள் சண்டையில் 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கியின் இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தாக்குதலின் தன்மையை குறைக்குமாறு துருக்கிக்கு ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. தாக்குதலில் கட்டுப்பாடு வேண்டும் என நேட்டோவும் துருக்கியை வலியுறுத்தியுள்ளது. வடகிழக்கு சிரியாவில் துருக்கி மேற்கொண்டுள்ள தன்னிச்சையான ராணுவத் தாக்குதல் ஆழ்ந்த கவலையை அளிப்பதாக இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பும் துருக்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.