பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் - இம்ரான்கான் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் - ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம்
Jul 25 2018 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரலாறு காணாத வகையில், 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பொதுத்தேர்தல் இன்று நடைபெறகிறது. இந்த தேர்தலில், நவாஷ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி, பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகள் களத்தில் உள்ளன.
பாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. 3 ஆயிரத்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில், 171 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 கோடி ஆகும். மக்கள் வாக்களிக்க வசதியாக 85 ஆயிரத்து 300 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் வன்முறை அதிகரிக்கலாம் என கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது இதுதான் முதல்முறை ஆகும். இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன. மேலும், இன்று தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது.