நேபாளத்தில் பங்களாதேஷ் விமானம் விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு - பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
Mar 13 2018 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில் பங்களாதேஷ் விமானம் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து, 67 பயணிகள், 4 விமானப் பணிக்குழுவினர் ஆகிய 71 பேருடன், US-Bangla Airlines என்ற விமானம் காத்மாண்டு வந்தது. அங்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க ஓடுபாதை எல்லைக்குள் நுழைந்தபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிசென்று அருகாமையில் உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விழுந்து தீ பிடித்து எரிந்தது.
உடனடியாக மீட்புக்குழுவினர் உஷார்ப்படுத்தப்பட்டு பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. 50 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். விமானத்தின் சிதைந்த பாகங்களிடையே காயங்களுடன் சிக்கியிருந்த 21 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமான விபத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
இதனிடையே, இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த நேபாளம் பிரதமர் Khadga Prasad Oli, விமான விபத்துக்குள்ளான பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.