உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : அமெரிக்கா மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆலோசனை
Apr 30 2017 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதை அடுத்து, அமெரிக்கா மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும், கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.
பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையிலும், வடகொரியா தனது நிலையில் இருந்து பின்வாங்காமல், தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை, வடகொரியா மீண்டும் நடத்தியுள்ளது. இது தோல்வியில் முடிந்ததை, தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இம்மாதத்தில் மட்டும், வடகொரியா நடத்தியிருக்கும் 3 வது ஏவுகணை சோதனை இதுவாகும். வடகொரியாவின் இந்த தொடர் நடவடிக்கைக்கு, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடும் விளைவுகளை வடகொரியா சந்திக்க நேரிடும் என்றும் அந்நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும், இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லர்சன் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.