அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், டொனால்டு டிரம்ப் செயல்படுவதாக ஹிலரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்
Oct 23 2016 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், டொனால்டு டிரம்ப் செயல்படுவதாக ஹிலரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இருவருக்கும் இடையே, நேரடி விவாத அடிப்படையிலான பிரச்சாரம், ஏற்கெனவே முடிந்திருக்கும் நிலையில், தற்போது, பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மூலம் ஆங்காங்கே பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள கிளீவ்லாந்து மாகாணத்தின் ஓஹியோ நகரில் ஜனநாயகக் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய ஹிலரி கிளிண்டன், தேர்தல் முடிவை ஏற்கமாட்டேன் என டிரம்ப் பிடிவாதமாகக் கூறியிருப்பதன் மூலம், அமெரிக்க ஜனநாயக நடைமுறையையே அவர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என கடுமையாக விமர்சித்தார். இதன்மூலம், தனது சர்வாதிகாரப் போக்கை டிரம்ப் வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். ஜனநாயக அடிப்படையில், ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்படுவதற்கும், சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என்றும் ஹிலரி கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவிற்கு கிளீவ்லாந்து மாகாணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அங்கு கிளிண்டன் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.