பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்க இந்தியா முடிவு : ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என ஐ.நா. நம்பிக்கை
Oct 1 2016 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்க இந்தியா முன்வந்திருப்பதால், இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என ஐ.நா. நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு இறுதியில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், பருவநிலை மாற்ற ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு, சர்வதேச அளவில் சுமார் 40 சதவீத பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக உள்ள அமெரிக்காவும், சீனாவும் ஒப்புதல் வழங்கின. இருப்பினும், இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரவேண்டுமெனில், 55 சதவீத பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக உள்ள நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும். இந்தச் சூழலில், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. மகாத்மா காந்தி பிறந்த தினமான, அக்டோபர் 2-ம் தேதி இந்த ஒப்பந்தத்துக்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும் என இந்தியா அறிவித்தது. இதையடுத்து, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் விரைவிலேயே நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் என, ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கி-மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியை கவுரவப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளன்று இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா முடிவெடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.