ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற பொதுமக்கள் ஆதரவு : பிரிட்டன் மக்களின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வரவேற்பு
Jun 25 2016 8:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என அந்நாட்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டாலருக்கு நிகரான பிரட்டிஷ் பவுண்டின் மதிப்பு, கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பிரிட்டன் மக்களின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் Donald Trump தெரிவித்தார்.
பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில், தொடர்ந்து நீடிப்பதா? அல்லது வெளியேறுவதா? என, பிரிட்டிஷ் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடைபெற்றது. இதில், சுமார் 52 சதவீதம் பேர், வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர். சுமார் 48 சதவீதம் பேர், நீடிக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே, சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில், வெளியேற வேண்டும் என்ற தரப்பு, முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு பின்னர், பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பும் குறைந்துள்ளது. 1985-ம் ஆண்டுக்குப் பின்னர் பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு குறைந்திருப்பது இதுவே முதன்முறையாகும். இந்திய பங்குச்சந்தைகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவை சந்திந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில், நிஃப்டி 252 புள்ளிகள் குறைந்து, 8 ஆயிரத்து 18 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 794 புள்ளிகள் குறைந்து, 26 ஆயிரத்து 207 ஆக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது என பிரிட்டன் மக்கள் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் Donald Trump தெரிவித்தார். தாம் மேற்கொண்டுள்ள பிரச்சாரம் இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ள அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரிட்டன் கருத்து வாக்கெடுப்பின் முடிவு எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது நாட்டு மக்கள், தங்களுடைய சுதந்திரத்தை பிரகடனம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இத்தேர்தல் அமையும் என்றும் Trump தெரிவித்துள்ளார்.