ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆதரவு தெரிவித்து கருத்துக்கணிப்பில் சுமார் 52 சதவீதம் மக்கள் வாக்களிப்பு : பிரிட்டன் மக்கள் முடிவால், இந்தியா உட்பட உலக அளவில் பங்குச் சந்தைகள் மற்றும் ரூபாய் மதிப்பு கடும் சரிவு
Jun 24 2016 10:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று அந்நாட்டின் 52 சதவீத மக்கள் பொது வாக்கெடுப்பில் வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் எனத் தெரிகிறது. பிரிட்டனைத் தொடர்ந்து, ஹாலந்தும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, "ஐரோப்பிய யூனியன்" என்ற கூட்டமைப்பை 1993-ம் ஆண்டு உருவாக்கின. இதில், ஃபிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட 28 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எந்தவொரு நாட்டில் வசிப்பவர்களும், அந்த அமைப்பில் உள்ள மற்ற நாடுகளில் சென்று வசிக்கலாம் - வேலைவாய்ப்புகளைப் பெறலாம்- கல்வி கற்கலாம்- தொழில் தொடங்கலாம். இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பிரிட்டனில் குடியேறத் தொடங்கினர். இதனால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் பிரிட்டன் மக்கள் கருதத் தொடங்கினர். இதன் காரணமாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பதை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 382 மையங்களில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், 3 கோடியே 12 லட்சம் பேர் வாக்களித்தனர். வாக்குகள் இன்று எண்ணப்பட்டதில், 52 சதவீத மக்கள், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு கோடியே 64 லட்சம் பேர் பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவும், ஒரு கோடியே 53 லட்சம் பேர் விலகுவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் எனத் தெரிகிறது. பிரிட்டனைத் தொடர்ந்து ஹாலந்தும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் மக்களின் முடிவு காரணமாக, உலக அளவில் பங்குச் சந்தைகள் மற்றும் கரன்சிகளின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் பங்குச் சந்தைகளிலும் இது எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேலும், நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் சரிவடைந்தது. மேலும், இந்திய ரூபாய்க்கு இணையான பவுண்டின் மதிப்பும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதனிடையே, உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இந்திய அரசு தயார் நிலையில் இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.