சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்யா தீவிரம் : தீவிரவாதிகளை ஒழிக்க ஃபிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து செயல்பட ரஷ்யா முடிவு
Nov 18 2015 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எகிப்தில் 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் கடந்த மாதம் விழுந்து நொறுங்கியதற்கு வெடிகுண்டு தாக்குதலே காரணம் என ரஷ்யா உறுதி செய்துள்ளதை அடுத்து, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளை ஒழிக்க ஃபிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து செயல்பட ரஷ்யா முடிவு செய்துள்ளது.
ரஷ்ய விமானம் ஒன்று 224 பேருடன் கடந்த மாதம் எகிப்தில் விழுந்து நொறுங்கியது. அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என ரஷ்யா தற்போது உறுதி செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை ரஷ்யா எதிர்கொள்வது இது முதல்முறையல்ல என்றும், எகிப்தின் சினாய் பகுதியில் ரஷ்யாவின் பயணிகள் விமானம் மீது தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கும் தாக்குதல் மிகவும் கொடியது என்றும் குறிப்பிட்டார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் உலகின் எந்தப்பகுதியில் மறைந்திருந்தாலும், தேடி கண்டுபிடித்து பழிக்குப்பழி வாங்கப்படுவார்கள் என ஆவேசமாக கூறினார். மேலும், சிரியாவில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவு செய்து, ஆளில்லா வெடிகுண்டு வீச்சு விமானங்களை அங்கு அனுப்பி வைத்துள்ளது. தீவிரவாதிகளை ஒழித்து கட்ட எதிர்காலத்தில், ஃபிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து செயல்படவும், ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.