அமெரிக்க சுதந்திர தின விழா கொண்டாட்டம் : ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
Jul 4 2015 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகி வரும் நிலையில், எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கண்கவர் வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க லட்சோபலட்சம் அமெரிக்கர்கள் தயாராகி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது, ஐ.எஸ். தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என உள்நாட்டு பாதுகாப்புத்துறையும், புலனாய்வுத்துறையும் எச்சரித்துள்ளதையடுத்து, உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தலைநகர் வாஷிங்டனில் 9 பாதுகாப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பூங்கா சேவை அமைப்பு சார்பில், 18 ஆயிரம் அடி தொடர் சங்கிலி வேலி அமைக்கப்படுகிறது. பாஸ்டன் நகரில் சார்லஸ் நதி பகுதியில் நடைபெறும் வாணவேடிக்கையினை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம் என்பதால், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பாஸ்டன் மேயர் கேட்டுக் கொண்டுள்ளார். நியூயார்க் நகரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் Tunisia, குவைத், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கேட்டுக் கொண்டார். எனினும், குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றபோதிலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.