வடகொரியாவில் கொரோனா பாதிப்பு : உடனடி நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு அதிபர் உத்தரவு
May 18 2022 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு அலுவலர்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்துள்ள அதிபர் கிம் ஜோங் உன், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ராணுவத்தை முடுக்கிவிட்டுள்ளார்.
வடகொரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் முதன் முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் பாதித்து லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது மேலும் 2 லட்சத்து 32 ஆயிரத்து 880 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், இதுவரை 17 லட்சத்து இருபதாயிரம் பேர் இந்த அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பைக் குறைப்பதில் விரைந்து செயல்படுதலே மிக முக்கியம் எனத் தெரிவித்துள்ள அதிபர் கிம் ஜோங் உன், தமது நாட்டு அலுவலர்கள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கண்டித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சி பொலிட் பீரோ கூட்டத்தில் பங்கேற்றபோது அரசு அலுவலர்களைக் கண்டித்த அவர் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.