கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் வடகொரியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு - ஒரு கிலோ வாழைப்பழம் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக தகவல்
Jun 18 2021 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவில் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ வாழைப்பழம் 3 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் முதன்முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, இதனை அவர் தெரிவித்தார். நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருவதாகக் கூறிய கிம் ஜாங் அன், கடந்த ஆண்டு ஏற்பட்ட சூறாவளி மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயத்துறை உற்பத்தி இலக்கை அடையவில்லை எனவும் தெரிவித்தார். இதனிடையே வட கொரியாவில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.