அஃப்கானிஸ்தானிலிருந்து விலகும் அமெரிக்க படைகள் : அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் ஜோ பைடன்
Apr 15 2021 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்காவில் செயல்பட்டுவந்த உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீது 2001 செப்டம்பர் மாதம் 11ம் தேதி, அல் காயிதா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர், 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உலக வர்த்தக மைய கட்டடமும் தகர்க்கப்பட்டது. இதையடுத்து உலக அளவில் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுப்பதாக அறிவித்த அமெரிக்கா, அஃப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவும், நேட்டோ படைகளும் இணைந்து பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அஃப்கானிஸ்தானில் பணியமர்த்தின. இந்நிலையில், இந்த வீரர்களை திரும்பப் பெறுவதாக 2013ம் ஆண்டிற்குப் பின் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார். ஆனால் அஃப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரஃப் கனியின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த அறிவிப்பை ஒபாமா கைவிட்டார். அதன் பின் அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ட்ரம்ப், அஃப்கானிஸ்தானில் உள்ள ராணுவத்தினரை 2021 மே மாதத்திற்கு முன்பாக திரும்பப்பெறுவதாக அறிவித்தார். ஆனால் தற்போதைய அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் 11ம் தேதிக்குள் அமெரிக்க ராணுத்தைத் திரும்பப்பெறுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடந்த தேதியில் அமெரிக்க படைகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்று அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.