ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் மேலும் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு - பாதிப்புக்கு உள்ளான இந்தியர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு
Feb 18 2020 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில், மேலும் இரண்டு இந்தியர்களுக்கு 'கொவைட்-19' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன், கொரோனா பாதிப்புக்குள்ளான இந்தியர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் என்ற கப்பலில், கடந்த 17-ம் தேதி நிலவரப்படி புதிதாக 99 பேருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 454-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 4 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் இரண்டு இந்தியர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் கப்பலில் தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கப்பலில் 138 இந்தியர்கள் உட்பட 3 ஆயிரத்து 711 பேர் உள்ளனர்.
இதனிடையே, சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.