உக்ரைனின் இரண்டு மாகாணங்கள் ரஷ்யாவுடன் இணைவதா அல்லது உக்ரைனில் தொடர்ந்து நீடிப்பதா என்பது குறித்து, வரும் 11-ம் தேதி பொது வாக்கெடுப்பு
Apr 23 2014 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைனின் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய மாகாணங்கள் ரஷ்யாவுடன் இணைவதா அல்லது உக்ரைனில் தொடர்ந்து நீடிப்பதா என்பது குறித்து, வரும் 11-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனைச் சேர்ந்த கிரீமியா மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, ரஷ்யர்கள் வாழும் பகுதியை இணைத்துக் கொள்ள ரஷ்யா நடவடிக்கை எடுத்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் பொது வாக்கெடுப்பு நடத்தி, அப்பகுதிகளை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டது. இந்நிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய மாகாணங்களும் ரஷ்யாவுடன் இணைவதா அல்லது உக்ரைனில் தொடர்ந்து நீடிப்பதா என்பது குறித்து, வரும் 11-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளன. இதனை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தற்காலிக அரசு தலைவர் டெனிஸ் புஷிலின் தெரிவித்தார். சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்காகவே இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் ரொஸ்டோவ்-ஆன்-டான் பகுதியில் உள்ள ஆற்றைக் கடந்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் எல்லை அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டுமென, உக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் வலியுறுத்தியுள்ளார்.