இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் - 7 வாரங்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது - போர் நிறுத்தத்தை வரவேற்று காசா நகர வீதிகளில் பொதுமக்கள் பேரணி
Aug 27 2014 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினருக்கும் இடையே கடந்த 7 வாரங்களாக நடைபெற்றுவந்த போரினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்புக்கும் இடையே நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த மாதம் 8-ம் தேதி தாக்குதல் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே எகிப்து மேற்கொண்ட முயற்சியின் பேரில், பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்ட போதிலும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. நேற்றும் காசா நகரின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதேபோல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனிடையே, நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரதிநிதிகள், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், காசா பகுதியில் நிரந்தர போர்நிறுத்தம் மேற்கொள்வதென்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுபற்றிய அறிவிப்பை, ரமல்லாஹ் நகரில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வெளியிட்டார். நேற்று மாலை 7 மணிமுதல் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 50 நாட்களாக நடைபெற்ற தாக்குதல்களில் 2,137 பாலஸ்தீனர்களும் 68 இஸ்ரேலியர்களும் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்துவந்த இந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்கும் வகையில், காஸா நகர வீதிகளில் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு முடிவுகட்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இருதரப்பினரும் ஒப்பந்தத்தின் அம்சங்களை முழுமையாக மதித்து நடக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.