காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் : பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியது
Jul 31 2014 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில், பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ள நிலையில், காஸா மீதான தாக்குதலை நிறுத்தி, இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து முற்றிலுமாக வெளியேறாத வரை போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை என ஹமாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
காஸாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை குறி வைத்து, கடந்த 8-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், இந்தத் தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில், இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் குண்டு மழை பொழிந்து வருகிறது. கிழக்கு Jebalya பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில், 13 பேர் உட்பட 43 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வீசிய ராக்கெட் குண்டுகளில், காஸா மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, காஸா முழுவதும் இருளில் மூழ்கியது. மின் நிலையத்தை சீரமைக்க ஓராண்டுக்கும் மேல் ஆகும் என காஸா மின்துறை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை ஏராளமான குழந்தைகள் உட்பட பலியான அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்து 200-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாத வரை போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை என ஹமாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக கோஷமிட்டனர். இஸ்ரேலுடனான உறவை மெக்ஸிகோ துண்டித்துக் கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு அஞ்சி, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், குடும்பத்தினருடன் ஐ.நா. பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.