எபோலா வைரஸ் தொற்று நோயால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மீண்டும் நிதியுதவி : உலக வங்கி அறிவிப்பு
Sep 27 2014 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எபோலா வைரஸ் தொற்று நோயால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு, நோயை எதிர்த்துப் போராட மீண்டும் நிதியுதவி அளிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் வைரஸ் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் விரைவாகப் பரவத் தொடங்கியது. மொத்தம் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கியுள்ள இந்த நோயினால் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 5800க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்த அந்த நாடுகள் போராடிவருகின்றன.
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள இந்த நாடுகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. இந்த வகையில் இன்னும் 170 மில்லியன் டாலர் அதிக நிதி உதவி அளிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் எபோலா நோய்க்கு எதிரான போராட்டத்தில் உலக வங்கியின் பங்களிப்பு இரட்டிப்பாகின்றது.
உலக நாடுகளின் வறுமையைப் போக்க உதவும்விதமாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கி உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி எபோலா நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள கினியா, லைபீரியா , சியரா லியோன் ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஏற்கனவே 230 மில்லியன் டாலர் நிதி உதவி அளித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய உதவித் தொகைக்கு வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்கவேண்டும். நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுகாதாரத் தொழிலாளர்களையும், தேவையான மருத்துவ வசதிகளை அதிகரித்துக்கொள்ளுவதன்மூலம் அங்குள்ள சுகாதார அமைப்புகளை வலுப்படுத்திக்கொள்ள இந்த நிதி உதவி பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.