மும்பையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ., பொதுக்குழுக் கூட்டத்தில், லோதா குழுவின் விதிமுறைகளை தளர்த்துவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால், சவுரவ் கங்குலி 2024-ம் ஆண்டு வரை, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் நீடிப்பார்.
பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக, கடந்த அக்டோபர் மாதத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்றார். இவரது தலைமையில், முதன்முறையாக, பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா குழு அளித்த விதிமுறைகளில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லோதா விதிமுறையில், மாநில சங்கம் அல்லது பி.சி.சி.ஐ., என, இரண்டு அமைப்புகளிலும் சேர்த்து மொத்தமே ஆறு ஆண்டுகள் தான் பதவி வகிக்க முடியும். இதன்படி, மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக, சவுரவ் கங்குலி ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் பதவி வகித்து விட்டார். இதனால், பி.சி.சி.ஐ., தலைவராக, அவரால் 10 மாதங்கள் மட்டுமே நீடிக்க முடியும். இதே சிக்கலில் பி.சி.சி.ஐ., செயலரும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷாவும் உள்ளார்.
லோதா குழுவின் விதிமுறைகளை மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றத்தை நாட பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தால், சவுரவ் கங்குலி, 2024-ம் ஆண்டு வரை பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் நீடிக்க முடியும். இதே போல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயற்குழுக் கூட்டத்தில், இனி பி.சி.சி.ஐ., பிரதிநிதியாக ஜெய் ஷா பங்கேற்பார்.
பி.சி.சி.ஐ., தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது, பி.சி.சி.ஐ., எடுத்த முடிவுகளுக்கு அனுமதி கிடைக்குமா என்பது தெரிய வரும்.