பாரா கிரிக்கெட்டில் தேசிய வீரராக விளையாடவிருக்கும் மதுரை வீரர் - தனது சாதனைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென ஆதங்கம்
Sep 14 2019 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கிரிக்கெட்டில் தேசிய வீரராக விளையாடவிருக்கும் மதுரை வீரர் சச்சின் சிவா, பாரா கிரிக்கெட்டிற்கு, மத்திய-மாநில அரசுகளிடமிருந்து போதிய அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வீரர் சச்சின் சிவா மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கிரிக்கெட் வீரர் ஆவார், இவர் இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ள இவர் வருகிற செப்டம்பர் 22 முதல் 25 ஆம் தேதி வரை நேபாளத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார்.
தமிழக அணிக்கு தலைமை தாங்கி, 120 போட்டிகளில் விளையாடி ஏறக்குறைய 80 போட்டிகளில் வென்றுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் தேதி, தன்னுடைய பிறந்த நாளில் 64 பந்துகளில் 115 ரன்களை நாட்அவுட் பேட்ஸ்மேனாக விளாசி, மேற்குவங்க அணிக்கு எதிராக இவர் நிகழ்த்திய சாதனை, தேசிய அளவிலானது. மேலும் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டி20 போட்டியில் வெறும் 15 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தேசிய சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளோடு விளையாட 12-ஆவது பேட்ஸ்மேனாக தேர்வு பெற்றிருக்கிறார். நேபாளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச பாரா கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக, இந்திய அணியின் முதன்மை ஆட்டக்காரராகவும் சச்சின் சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய சாதனை, இந்திய அளவில் பெரிதாக பார்க்கப்படவில்லை என வருத்தம் தெரிவிக்கும் சச்சின் சிவா, பாரா கிரிக்கெட்டிற்கு போதுமான ஊக்குவிப்பு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கிடைக்காதது வருத்தமளிப்பதாக கூறுகிறார்.
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெற, எந்த மாநிலத்திலும் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், இதனால் ஏராளமான வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவர முடியாத நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.