ஆசிய கோப்பை கிரிக்கெட் 'சூப்பர்-4' சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா - இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசம்
Sep 24 2018 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தானுக்கு எதிரான 'சூப்பர்-4' சுற்று ஆட்டத்தில், ஷிகர் தவான், ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 'சூப்பர் 4' சுற்று ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் ரன் எடுக்க திணறினர். இதனால் அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு, 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக Shoaib Malik 78 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவ்விருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் பந்து வீச்சாளார்கள் செய்வதறியாது திகைத்தனர். அதிரடியாக விளையாடிய ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர்.
இறுதியில், 39 புள்ளி 3 ஓவர்களில் 238 ரன்கள் குவித்து, இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 111 ரன்களுடனும் ராயுடு 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். துபாயில் நாளை நடைபெறவுள்ள 'சூப்பர் 4' சுற்று போட்டியில், அப்கானிஸ்தான் அணியை, இந்தியா எதிர்கொள்கிறது.