ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி : ஹாங்காங் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
Sep 19 2018 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஷிகார் தவான் 127 ரன்களும், அம்பத்தி ராயுடு 60 ரன்களும் எடுத்து அணிக்கு வலிமை சேர்த்தனர். ஹாங் காங் அணி சார்பில் சின்சிட் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
286 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஹாங்காங் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசாகத் கான் மற்றும் கேப்டன் அன்சுமன் ராத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடத் தொடங்கிய இவர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை திணறடிக்கச் செய்தனர். விக்கெட் இழப்பின்றி ரன்கள் சீராக உயர்ந்ததால், ஹாங்காங் அணி வெற்றியை நோக்கிச் சென்றது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 174 ரன்களை குவித்து அசத்தியது. அன்சுமன் ராத் 97 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது, குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிசாகத் கான் 92 ரன்களில், அறிமுக வீரர் கலீல் அகமது பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பவே, 50 ஓவர்களின் முடிவில் ஹாங்காங் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் சாகல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடி சதமடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்தியா -பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது.