ஐ.பி.எல். 2021 - டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி
Oct 11 2021 8:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
14-வது ஐபிஎல் சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டி துபையில் நேற்று இரவு நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் டுபிளசிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி 63 ரன்கள் குவித்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசி, சென்னை அணியை கேப்டன் தோனி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று, 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் சார்ஜாவில் இன்று நடைபெறும் போட்டியில் களம் காண்கின்றன. இதில் வெற்றிபெறும் அணி, வரும் 13-ம் தேதி, 2-வது தகுதிச்சுற்று போட்டியில், டெல்லி அணியை எதிர்கொள்ளும். இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி துபையில் நடைபெறுகிறது.