சென்னை - பஞ்சாப் அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் : 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி
Oct 8 2021 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை - பஞ்சாப் அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியில், கெய்க்வாடு, மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, எம்.எஸ். தோனி ஆகிய முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து, சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால், அந்த அணி தடுமாற்றம் அடைந்தது. தொடக்க ஆட்டக்காரரராக களமிறங்கிய டூப்ளசிஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்த டூப்ளசிஸ், 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளையும், முகம்மது ஷமி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
135 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான கே.எல். ராகுலின் அதிரடி ஆட்டம், சென்னை அணியை நிலைகுலைய வைத்தது. ஒருபுறம் மயங்க் அகர்வால், சர்பராஸ் கான், ஷாருக்கான், மர்க்ரம் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகிய நிலையில், மறுபுறம் கே.எல். ராகுலின் விறுவிறுப்பான ஆட்டம் அந்த அணிக்கு நம்பிக்கை அளித்தது. 42 பந்துகளை சந்தித்த கே.எல். ராகுல், 8 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 98 ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் பஞ்சாப் அணி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 139 ரன்கள் அடித்து இலக்கை எட்டியது.
ஐ.பி.எல். தொடரில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான லீக் ஆட்டம் முடிவடைந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் சென்னை 2-வது இடத்திலும், பஞ்சாப் 5-வது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.