டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் - கொரோனா பரவல் காரணமாக அதிக கட்டுப்பாடுகள்
Jul 23 2021 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கூடிய தொடக்க விழாவை, அந்நாட்டு மன்னர் நாருஹிடோ தொடங்கி வைத்தார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு 'ஒலிம்பிக் சுடர்' ஏற்றும் நிகழ்வுடன் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. ஜப்பான் மன்னர் நாருஹிடோ போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சூகா, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாக் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்தியா சார்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடி ஏந்தி தலைமையேற்றுச் சென்றனர்.
கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 11 ஆயிரத்து 683 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர பயிற்சியார்கள், அணி மேலாளர்கள், உதவியாளர்கள், மருத்துவர்கள், முடநீக்கியல் நிபுணர்கள் என 205 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஜப்பானில் முகாமிட்டுள்ளனர்.